புதுடெல்லி: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் வர்த்தக அணுகுமுறைகள் தொடர்பாக இந்தியா விசாரணை நடத்தி வருகிறது.
விசா அத்துமீறல், இனப் பாகுபாடு போன்றவை அவற்றில் அடங்கும்.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவருக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய கடிதம் மூலம் இது தெரியவந்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் வர்த்தக, சட்ட விவகாரப் பிரிவின் முன்னாள் இயக்குநர் திருவாட்டி நந்தினி மேத்தாவுக்கு இந்திய உள்துறை அமைச்சு அனுப்பிய மின்னஞ்சலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது.
திருவாட்டி மேத்தா 2020ஆம் ஆண்டு வரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
“விசா அத்துமீறல், சட்டவிரோத கட்டமைப்புகள், வரி ஏய்ப்பு, மற்ற முறையற்ற அணுகுமுறைகள் ஆகியவை தொர்பான விவரங்கள் கிடைத்துள்ளன,” என்று இந்திய உள்துறை அமைச்சின் வெளிநாட்டினர் வட்டாரப் பதிவு அலுவலகத்தைச் சேர்ந்த திரு தீபக் யாதவ் கூறினார்.
நெட்ஃபிளிக்ஸ் மீதான விசாரணையை வரவேற்பதாக திருவாட்டி மேத்தா தெரிவித்தார்.
தம்மை நியாயமற்ற வகையில் பதவி நீக்கம் செய்ததற்கும் இன, பாலின பாகுபாடு தொடர்பாகவும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக அவர் அமெரிக்காவில் வழக்கு தொடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணையின் கண்டுபிடிப்புகளை இந்திய அரசாங்கம் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் நெட்ஃபிளிக்ஸ் மீது இந்திய அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கூடுதல் கருத்துகளை வெளியிடவில்லை.