புதுடெல்லி: இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்கள், திறமையான பணிகள் மூலம், உற்பத்தியை அதிகரித்து சாதித்திருப்பதாக மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளியல் கொண்ட இந்தியாவில், நிலக்கரி மின்சாரம் தயாரிக்கவும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் எரிபொருளாகவும் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் புதிய சாதனை இந்தியாவிற்கு ஒரு பெருமையான தருணம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒரு பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்பது மகத்தான மைல்கல் என்றும் இது எரிசக்தி பாதுகாப்பு, பொருளியல் வளர்ச்சி, சுய சார்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உணர்த்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தச் சாதனை அமைந்துள்ளது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் மின் தேவைகளைச் சமாளிக்க, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தச் சாதனை உதவும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் கிஷன் ரெட்டி, இந்த வளர்ச்சியின் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி தலைமையகமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.