புதுடெல்லி: விமான எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க இந்திய விமானப் போக்கு வரத்துத் துறைக்கு ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய நிதியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஜூன் 3) ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலையும் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளன. இதனால் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, போர் முடியும் வரை உள்நாட்டுச் சேவை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விலையேற்றத்தை நிறுத்தி வைக்கும்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், புதிய நிதியம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
தேவைக் குறைவு காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்திய விமான நிறுவனங்கள் தங்களது விமானச் சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.
குறைவான பயணத் தேவை, அதிக எரிபொருள் விலையால் ஏற்பட்ட செயல்பாட்டுச் செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களால், மார்ச் மாதத்துடன் ஒப்புநோக்க ஏப்ரலில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 4.2 விழுக்காடு குறைந்து, ஏறக்குறைய ரூ.1.38 கோடியாகப் பதிவானது. மே மாதம், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.8,289.04 (அதாவது 8.56 விழுக்காடு) உயர்ந்து, ரூ.1,04,927.18 ஆகப் பதிவானது.
இவ்வேளையில், டெல்லி-என்சிஆர் (ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்) சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத எரிசக்திப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் ரூ.9,585 கோடி மதிப்பிலான ஈராண்டுத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

