பொதுவாக மெட்ரோ ரயில்கள் பூமியின் கீழே சுரங்கப் பாதை அமைத்தும், உயர் மட்டத்தில் தடம் அமைத்தும் செல்வது வழக்கம்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓர் ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ ரயில் இயக்குவது இதுவே முதல்முறை.
அந்த வகையில் கோல்கத்தா மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை (ஏப்ரல் 12) புதிய சரித்திரம் படைத்தது.
கோல்கத்தாவின் மகாகரன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா மைதான மெட்ரோ ரயில் நிலையம் வரை இந்தச் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் அறிமுக ஓட்டம் விடப்பட்டது.
அதில் மெட்ரோ ரயில்வே பொது மேலாளர் உதய்குமார் ரெட்டி, அதிகாரிகள் ஆகியோருடன் மெட்ரோ ரயில் பணியில் ஈடுட்டு இருந்த பொறியாளர்களும் பயணம் செய்தனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "கோல்கத்தா மற்றும் அதன் புறநகர் மக்களுக்கு நவீன போக்குவரத்துச் சேவையை வழங்குவதில் இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.


