புதுடெல்லி: இந்திய மக்கள்தொகையில் பெருஞ்செல்வந்தர்களாக இருக்கும் ஒரு விழுக்காட்டினர் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளது புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
‘உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகம்’ எனும் ஆய்வு நிறுவனம், பிரேசில், அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களைவிட இந்தியப் பணக்காரர்கள் அதிக வருமானம் ஈட்டுவதாகத் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியா தனது சந்தைகளை வெளிநாடுகளுக்குத் திறந்துவிட்ட பிறகு, இந்தியப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது.
சென்ற ஆண்டு இறுதி நிலவரப்படி, இந்தியாவின் 40.1 விழுக்காட்டுச் செல்வம், பெரும்பணக்காரர்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1961ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே ஆக அதிகம்.
அத்துடன், நாட்டின் வருமானத்தில் அவர்களது பங்கு 22.6%. இது 1922ஆம் ஆண்டிற்குப் பிறகு இது ஆக அதிகம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்க, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றார். அதற்கடுத்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் பாஜக வென்று, ஆட்சியைத் தக்க வைத்தது.
சென்ற ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தியப் பொருளியல் 8.4% வளர்ச்சி கண்டது. ஆயினும், திரு மோடியின் இந்த இரண்டு தவணை ஆட்சிக் காலத்தில் பணக்காரர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்குமான வருமான இடைவெளி பெரிதும் கூடிவிட்டதாக அவருடைய விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், போதிய கல்வி இல்லாமை போன்ற காரணங்களால் பலரும் குறைந்த ஊதிய வேலைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவையெல்லாம் கடைசி 50% மற்றும் நடுத்தர 40% இந்தியர்களின் வளர்ச்சியை மந்தமாக்கிவிட்டது என்றும் உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரே ஒருவரின் நிகர சொத்து மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$1.34 பில்லியன்) அதிகமாக இருந்த நிலையில், 2022ல் அந்த எண்ணிக்கை 162 பேராக உயர்ந்துவிட்டது என்றும் ஃபோர்ப்ஸ் சஞ்சிகைத் தகவல் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் முதல் 10,000 பணக்காரர்கள் சராசரியாக ரூ.2,260 கோடி (S$365 மில்லியன்) சொத்து வைத்துள்ளனர் என்றும் இது நாட்டின் சராசரியைவிட 16,763 மடங்கு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.