இவ்வூரில் எல்லாரது பெயரும் ஏதோ ஒரு பாட்டுத்தான்!

இவ்வூரில் எல்லாரது பெயரும் ஏதோ ஒரு பாட்டுத்தான்!

1 mins read
05eb05c5-d89a-4e28-8cfe-eb3b0e96438a
கொங்தோங்கில் உள்ள எல்லாருக்கும் உண்மைப் பெயர், பாட்டின் பெயர் என இரண்டு பெயர்கள் உள்ளன. படம்: ஊடகம் -

ஷில்லாங்: இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள கொங்தோங் எனும் ஊரில், யாரும் ஒருவரை ஒருவர் அவரது உண்மையான பெயரைச் சொல்லி அழைப்பதில்லை.

ஒருவருக்கான மெல்லிசையை அல்லது இசைமெட்டைப் பாடியே அழைக்கின்றனர். இதனால் அவ்வூர் 'ஊதலூர்' அல்லது 'பாடலூர்' என அழைக்கப்படுகிறது.

அத்துடன், கொங்தோங்வாசிகள் சக ஊராரிடத்தில் ஏதேனும் செய்தி கூற விரும்பினால், அதனையும் 'விசில்' மூலமே தெரிவிக்கின்றனர்.

இதனால், கொங்தோங்கில் உள்ள எல்லாருக்கும் இரண்டு பெயர்கள் உள்ளன - உண்மைப் பெயரும் பாட்டின் பெயரும். அப்பாட்டிலும் குறும்பாட்டு, நெடும்பாட்டு என இருவகை உண்டு.

கொங்தோங்கில் ஏறக்குறைய 700 பேர் வசிக்கின்றனர். அந்த 700 பேருக்கும் தனித்தனி மெட்டு உண்டு.

காசி எனும் பழங்குடியின மக்கள் அங்கு வசிக்கின்றனர்.

குழந்தை பிறந்ததும் அதற்கான மெட்டை அதன் தாயாரே முடிவுசெய்வாராம். "யாரேனும் இறந்துவிட்டால் அவருக்கான மெட்டும் அத்தோடு போய்விடும்.

மெட்டின்மூலம் அழைக்கும் முறை எப்போது தொடங்கியது எனத் தெரியவில்லை. ஆனாலும், அது எங்களுக்கு மகிழ்ச்சியே தருகிறது," என்றார் பிவ்ஸ்டர் கோங்சிட் என்ற அவ்வூர்வாசி.

இப்போது, மேகாலயாவின் மேலும் சில சிற்றூர்களும் இப்படி அழைக்கும் முறைக்கு மாறிவருவதாக ஜிப்சன் சோக்லெட் என்பவர் குறிப்பிட்டார்.