புவனேஸ்வர்: வாடிக்கையாளருக்கு மூன்று ரூபாய் மீதிச் சில்லறை தர மறுத்த அச்சுப்படி நகலெடுக்கும் (Photocopy) கடைக்காரருக்கு ரூ.25,000 (S$410) அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தியாவின் ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரஃபுல்ல குமார் தாஸ் என்ற செய்தியாளர் இவ்வாண்டு ஏப்ரல் 28ஆம் தேதி அங்குள்ள நகலெடுக்கும் கடைக்குச் சென்றார்.
அங்கு ஒரு பக்கம் நகலெடுக்க இரண்டு ரூபாய் கட்டணம். அதன்படி, ஒரு பக்கம் நகலெடுத்தபின் கடைக்காரரிடம் ஐந்து ரூபாய் கொடுத்தார் தாஸ். ஆயினும், மீதி மூன்று ரூபாய் சில்லறை தர கடைக்காரர் மறுத்துவிட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
தாஸ் பலமுறை கேட்டதையடுத்து, அந்த ஐந்து ரூபாயையும் அவரிடமே திருப்பித் தந்த கடைக்காரர், “பிச்சைக்காரனுக்குப் போட்டதாக நினைத்துக்கொள்கிறேன்,” என்றும் சொன்னார்.
கடைக்காரர் உரிய ரசீதும் தரவில்லை என்பதால் அது நியாயமற்ற வணிக நடைமுறை என்றும் தனக்கு நிதியிழப்பு ஏற்பட்டதோடு, மன அழுத்தமும் ஏற்பட்டது என்றும் கூறி, குறைதீர்ப்பு ஆணையத்தில் தாஸ் புகாரளித்தார்.
“இது தனிப்பட்ட ஒருவரின் வழக்கு மட்டுமன்று. வாடிக்கையாளர்கள் அனைவரது உரிமைகள் தொடர்பானது. நான் அவமதிக்கப்பட்டேன். அதனால், குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகினேன். அங்கு எனக்கு நீதியும் கிடைத்தது. நீதிமன்றத்திற்கு நன்றி,” என்றும் கூறி, மகிழ்ச்சி தெரிவித்தார் தாஸ்.