புதுடெல்லி: உலக அளவில் விண்வெளிக்கு உந்துகணைகளைச் செலுத்த மற்ற உலக நாடுகளைவிட இந்தியா அதிகம் செலவிட்டு வருகிறது.
அதிலும், அமெரிக்காவைவிட நான்கு மடங்கு அதிக தொகையை இந்தியா செலவிடுவது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின்போது தெரிய வந்ததுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இந்தியா ஒரு உந்துகணையை வெற்றிகரமாகச் செலுத்தியது.
இந்நிலையில், அதே ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியா தனது மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடிய நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் நிபுணரான அலெசியோ டெர்சி, இத்தாலியைச் சேர்ந்த பிரான்செஸ்கோ நிக்கோலி ஆகிய இருவரும் ‘எக்கானமிக் லெட்டர்ஸ்’ என்ற மதிப்பாய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
அதில், கடந்த 1960 முதல் 2025 வரை 6,740 உந்துகணைகளை இந்தியா விண்வெளியில் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2025ல் ஒரு கிலோ எடைகொண்ட சுமையைப் புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு ஏவுவதற்கான இந்தியாவின் சராசரி செலவு ஒரு கிலோவுக்கு ஏறக்குறைய 13,300 அமெரிக்க டாலராக உள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பொருளியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வின்படி, புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு ஒரு கிலோகிராம் எடையை ஏவுவதற்கு உலகிலேயே இந்தியாதான் அதிக செலவு செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதன் செலவு ஒரு கிலோவுக்கு 3,225 அமெரிக்க டாலர் மட்டுமே. இதன்படி பார்த்தால், அமெரிக்காவை விட இந்தியாவின் ஏவுதல் செலவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
உலகளாவிய சராசரி செலவு, கிலோவுக்கு 3,868 அமெரிக்க டாலராக உள்ள நிலையில், ஜப்பான் (அமெரிக்க டாலர் 5,287), சீனா (அமெரிக்க டாலர் 5,809), ரஷ்யா (அமெரிக்க டாலர் 6,682) ஆகியவை இந்தியாவைவிடக் குறைவான செலவையே பதிவு செய்துள்ளன.
அமெரிக்காவின் குறைந்த செலவுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பமே முதன்மைக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் பேசுகையில், “ஆய்வாளர்கள் தவறான மற்றும் முரண்பாடான தரவுகளைப் பயன்படுத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்,” என்று தெளிவுபடுத்தினார்.
முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். சோம்நாத் கூறுகையில், அமெரிக்க நிறுவனங்களின் மறுபயன்பாட்டு ராக்கெட் நன்மைகள் அவர்களின் சொந்த திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.


