புதுடெல்லி: 2030ஆம் ஆண்டுக்குள் மின்னணு துறையை 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்னும் இலக்கை இந்தியா நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
அந்த வளர்ச்சியை எட்டினால் நாட்டில் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைகள் உருவாகும்.
புதுடெல்லியில் புதன்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற மின்னணு சில்லு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், பகுதி மின்கடத்தி போன்ற துறைகளால் நாடு கண்டுவரும் பலன்களை விவரித்தார்.
தற்போது இந்தியாவின் மின்னணுச் சந்தையின் அளவு 155 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
இன்னும் அதிகமான மின்னணு சில்லு உற்பத்தியாளர்களைக் கவர இந்தியா முயன்று வருகிறது. அதற்காக சில சலுகைகளை வழங்கவும் அது முன்வந்துள்ளது. உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன்களைத் தயாரிக்க இந்திய அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
திரு மோடியின் அரசாங்கம் பகுதி மின்கடத்தித் துறையில் இதுவரை 15 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டாடா குழுமம் தனது ஆகப்பெரிய மின்னணுச் சில்லு உற்பத்தித் தொழிற்சாலையை தொடங்குவதும் அதில் அடங்கும்.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மைக்ரான் டெக்னாலஜி என்னும் அமெரிக்க நிறுவனம் 2.75 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமான முதலீட்டில் தொழில்களைத் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.