இந்திய விமான நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய பரிசோதனைக் கருவிகள்

இந்திய விமான நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய பரிசோதனைக் கருவிகள்

1 mins read
65dbcd5b-00ff-416e-b61d-d3a241d6746d
இந்திய விமான நிலையங்களில் அதிகக் கூட்டமும் குழப்பமும் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகள் புதிய பரிசோதனைக் கருவிகளை அறிமுகம் செய்ய முயன்று வரு*ின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைகளின்போது மடிகணினிகள், கைபேசிகள், மின்னூட்டிகள் ஆகியவற்றைப் பயணிகள் இனி வெளியில் எடுத்து வேறு தட்டில் வைக்க சில மாதங்களில் தேவை இருக்காமல் போகலாம்.

இந்தியாவின் சிவில் ஆகாயப் பாதுகாப்புப் பிரிவு, மின்னியல் சாதனங்களை வெளியில் அகற்றாமல் பெட்டிகளைச் சோதிக்கும் நவீன தொழில்நுட்பத்தை வேகமாக நடப்புக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

அது குறித்த உத்தரவை அது இன்னும் ஒரு மாதத்துக்குள் பிறப்பிக்கக்கூடும் என்று தி ஹிந்து நாளிதழ் கூறியுள்ளது.

பெட்டிகளைப் பரிசோதிக்கும் இத்தகைய புதிய கருவிகள் ஏற்கெனவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

அவற்றைப் பயன்படுத்தும்போது பயணிகள் மின்னியல் சாதனங்களையோ தாங்கள் அணிந்திருக்கும் குளிர் ஜாக்கெட்டுகளையோ அகற்றத் தேவையில்லை.

விமானப் பயணங்களும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் இந்திய விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பரிசோதனைகள் முடிவதற்கு நீண்ட நேரம் பிடிப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

புதிய கருவிகள் முதலில் புதுடில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய விமான நிலையங்களில் வைக்கப்படும்.

ஓராண்டுக்குள் மற்ற விமான நிலையங்களில் அவை நிறுவப்படும் என்று தி ஹிந்து கூறியது.