கோலாலம்பூர்: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைக் கோலாலம்பூரில் திங்கட்கிழமை (அக்டோபர் 27) சந்தித்துள்ளார்.
சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்தும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு இடையே அவர்கள் சந்தித்துப் பேசினர்.
“அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், வட்டார, உலகளாவிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடினோம்,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் எட்டப்படும் என்று கருதப்படும் நிலையில் இரு அமைச்சர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டம் தொடர்பில் இதுவரை ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிகாசாக் புவாங்கெட்கியோ ஆகியோரை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியே சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்றவை ஆசியானின் கலந்துரையாடல் பங்காளித்துவ நாடுகளாக விளங்குகின்றன.

