புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அப்பொறுப்பில் உள்ள உபேந்திர திவேதி வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
அதிபர் முர்முவின் ஒப்புதல் கிடைத்த பிறகு புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பார் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாக பணியாற்றி வரும் தீரஜ் சேத், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றவர்.
கடந்த 1986ஆம் ஆண்டு இந்திய ராணுவப் பணியில் சேர்ந்தார். பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்பு வகித்து தனது அணியை வழிநடத்திய நீண்ட அனுபவம் கொண்டவர்.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீரஜ் சேத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சவாலான பணிகளைத் திறமையாகக் கையாண்டவர் என்ற பெயர் பெற்றவர்.
எதிர்வரும் 30ஆம் தேதி ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கும் அவர், 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார்.

