புதுடெல்லி: இந்தியப் பொருளியல் இறந்த நிலையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியப் பொருளியல் நிலை குறித்து பிரதமர், நிதி அமைச்சர் தவிர மற்ற அனைவருமே தெரிந்துவைத்துள்ளதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
“பாஜக அரசு நாட்டின் பொருளியலைச் சீரழித்துவிட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கை, தற்காப்புத்துறை ஆகியவை மத்திய அரசால் கீழ்நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டன.
“இந்தியப் பொருளியல் இறந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. கௌதம் அதானிக்கு தேவையான உதவிகளைச் செய்தே பொருளியல் சீரழிக்கப்படுகிறது,” என்றார் ராகுல் காந்தி.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இந்தியப் பொருளியல் குறித்து விமர்சித்திருப்பது குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, “ஆம், டிரம்ப் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்,” என்றார் ராகுல்.
“அதிபர் டிரம்ப் உண்மையைச் சொல்லி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் டிரம்ப் சொல்வது போலத்தான் செயல்படுத்தப்படுகிறது.
“ஒருபுறம், அமெரிக்கா கடுமையாக இந்தியாவை விமர்சிக்கிறது. மறுபுறம், சீனா மிரட்டுகிறது. ஆனால், இந்திய வெளியுறவுக் கொள்கை சிறப்பாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“உலகம் முழுவதும் எம்பிக்கள் குழுவை அனுப்பினீர்களே, எந்த நாடாவது பாகிஸ்தானைக் கண்டித்ததா? இந்த நாட்டை எப்படி நடத்தி செல்வது என்று ஆளும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை,” என்று ராகுல் மேலும் குறிப்பிட்டார்.