புதுடெல்லி: நாட்டின் எரிசக்தி ஆதாரங்களைப் பொருத்தவரை எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவுகள் எடுக்கின்றன என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி சார்ந்த முடிவுகளை நாட்டின் நலனே வழிநடத்தும் என்றும் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சந்தை நிலவரங்களின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எண்ணெய் கிடைக்கும் அளவு, அனைத்துலக அச்சுறுத்தல், சந்தை விலை ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றார்.
மேலும், நிதி விவகாரங்கள் போன்ற சிக்கல் நிறைந்த மற்ற அம்சங்கள் குறித்தும் எண்ணெய் நிறுவனங்கள் நன்கு பரிசீலனை செய்வதாகவும் அதன் பிறகே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் திரு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் இந்தியா ஒரு வளரும் பொருளியல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்தியா 80 முதல் 85% இறக்குமதியைச் சார்ந்திருப்பதாகவும் இறக்குமதியால் ஏற்படக்கூடிய பண வீக்கத்தையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டார்.
“எனவே, எரிசக்தி துறையில் அரசாங்கம் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறதோ, அதற்கு ஈடாக நுகர்வோர் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை,” என்றார் அவர்.

