வாஷிங்டன்: அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியர் குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2.16 கோடி (S$340,819) அன்பளிப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டு மத்தியப் புலனாய்வுத் துறை (FBI) அறிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல்,34, என்பவர் தனது மனைவி பலேக் படேலுடன் அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ‘டோனட்’ கடையொன்றில் வேலை செய்துவந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு பணியில் இருந்த போது, அவர் மனைவியை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
விசா காலம் முடிவடைந்ததால், கணவருடன் மீண்டும் இந்தியா திரும்பலாம் என்று 21 வயது பலேக் படேல் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. பத்ரேஷ்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்ததாக விசாரணையில் தெரியவந்தது. கொலைக்குப் பிறகு பத்ரேஷ்குமார் தலைமறைவாகிவிட்டார்.
இது தொடர்பாக பத்ரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்த அமெரிக்கக் காவல்துறை, அவருக்குக் கைதாணை பிறப்பித்தது.
இந்நிலையில், தேடப்படும் 10 முக்கியக் குற்றவாளிகள் பட்டியலில் பத்ரேஷ்குமாரின் பெயரை எஃப்பிஐ சேர்த்துள்ளது. அவர் அமெரிக்காவில் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கலாம். அல்லது கனடாவுக்கோ இந்தியாவிற்கோ சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவரைப் பற்றித் தகவல் கொடுத்தால் 250,000 அமெரிக்க டாலர் (ரூ.2.16 கோடி) வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.