இந்தியத் தயாரிப்பு C295 ராணுவ விமானம் விரைவில் பறக்கத் தயார்

இந்தியத் தயாரிப்பு C295 ராணுவ விமானம் விரைவில் பறக்கத் தயார்

2 mins read
2dc99219-232e-4064-8904-b7273f873d93
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முதல் இந்தியத் தயாரிப்பு சி295 விமானம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் வெளிவரும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார். - படம்: ஏர்பஸ்

வடோதரா: இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் சி295 ராணுவப் போக்குவரத்து விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

அமெரிக்க விமானப்படை இந்த ரக விமானங்களை ஈரானில் நடத்திய ஓர் அதிரடி மீட்புப் பணிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் வடோதராவிலுள்ள டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் இந்த விமானங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் போர் விமானத் தயாரிப்பில் கடந்த பல ஆண்டுகளாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

தற்போது முதன்முறையாக தனியார் இந்திய நிறுவனம் ஒன்று முழு அளவிலான ராணுவ விமான உற்பத்திப் பிரிவைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவின் தனியார் வான்வெளித் துறையில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

டாட்டா தொழிற்சாலையிலிருந்து விமானம் வெளியே கொண்டு வரப்படும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் வலம் வந்தது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முதல் இந்தியத் தயாரிப்பு சி295 விமானம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் வெளிவரும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

தற்போது முதல் விமானம் தனது தொடக்கப் பயணத்துக்குத் தயாராகி வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏ.கே. பாரதி அண்மையில் வடோதரா தொழிற்சாலைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் 40 விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ள இந்தத் திட்டம், இந்தியாவின் பாதுகாப்புத் தற்சார்பு நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்