மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில (அலோபதி) சிகிச்சை அளிக்க மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளதற்கு இந்திய மருத்துவச் சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மகாராஷ்டிர மருத்துவ மன்றச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவுசெய்த ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆயினும், 2015ஆம் ஆண்டில் அவ்வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு ‘சிசிஎம்பி’ என்று மருந்தியல் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூன் 30ஆம் தேதி மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அரசாணையில், “நவீன மருந்தியல் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் மகாராஷ்டிர மருத்துவ மன்றத்தில் முறைப்படி பதிவுசெய்யலாம். அதன்பிறகு அவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம், அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு, “பல்வேறு எம்பிபிஎஸ் மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளைப் பரிந்துரை செய்கின்றனர். நாங்கள் முறையாக மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவுசெய்துள்ளோம். எங்கள் நோயாளிகளுக்குத் தேவையான அலோபதி மருந்துகளைப் பரிந்துரை செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. மகாராஷ்டிர அரசின் முடிவை முழுமனத்தோடு வரவேற்கிறோம்,” என்று ஹோமியோபதி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்திய மருத்துவச் சங்கத்தின் மகாராஷ்டிரத் தலைவர் சந்தோஷ், “மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மூத்த அரசியல் தலைவர்கள் பலர் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்துகின்றனர். அவர்களின் அழுத்தத்தால் மகாராஷ்டிர அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதனை எதிர்த்துச் சட்டரீதியாகப் போராடுவோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

