புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டது.
“இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா, கடத்தப்பட்ட கப்பலையும் அதன் ஊழியர்களையும் பாதுகாப்பாக மீட்டது,” என்று கடற்படைப் பேச்சாளர் ‘எக்ஸ்’ ஊடகம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானியக் கொடியுடன் கூடிய ‘இமான்’ என்ற அந்த மீன்பிடிக் கப்பலில் புகுந்த கடற்கொள்ளையர்கள், அதன் 17 ஊழியர்களையும் பிணை பிடித்தனர்.
இந்தியாவின் கொச்சி துறைமுகத்திற்கு மேற்கே 700 கடல்மைல் தொலைவில், அரபிக்கடல் பகுதியில் அந்த மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
கடற்கொள்ளையரிடமிருந்து வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல், பாரசீக வளைகுடா, சோமாலியாவின் கிழக்குக் கடலோரம், ஏடன் வளைகுடாப் பகுதிகளில் வலம் வருகிறது.
இதனிடையே, சோமாலியக் கடற்கொள்ளையர்களால் படகுடன் கடத்தப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களை விடுவிக்க உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்துள்ளது.