புதுடெல்லி: இந்தியக் கடற்படையைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் சிங்கப்பூர்ப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தன.
இந்தியா - சிங்கப்பூர் இடையிலான ஆழமாக வேரூன்றிய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், கிழக்குக் கடற்படையின் கொடி அதிகாரியான ரியர் அட்மிரல் அலோக் ஆனந்த் தலைமையில், கிழக்குக் கடற்படையைச் சேர்ந்த உதயகிரி, சக்தி, கவரட்டி ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்கள், ஜூலை 1ஆம் தேதி சாங்கி கடற்படைத் தளத்திற்கு வருகைபுரிந்தன.
இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக அப்பயணம் அமைந்ததாக இந்தியத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
ஆசியான் - இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு, இந்திய அரசின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை ஆகியவற்றுடன் இணைந்த வகையில், அந்த மூன்று நாள் பயணம் அமைந்தது.
அப்போது, இரு கடற்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பையும் கடற்படை ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், பல்வேறு தொழில்முறை கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், இந்தத் துறைமுகப் பயணத்தின்போது பள்ளி மாணவர்கள் ஐஎன்எஸ் கவரட்டியைப் பார்வையிட்டு, கடற்படை நடவடிக்கைகள், போர்க்கப்பல் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரடியாகக் கண்டனர்.
இந்தப் பயணத்தின் வெற்றிகரமான நிறைவு, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
துறைமுகப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்குப் பங்களித்துள்ளன.

