புதுடெல்லி: கடற்கொள்ளையர்களும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் மேற்கு அரபிக்கடலில் செல்லும் வணிக மற்றும் பயணிகள் கப்பல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். அவர்கள் அவ்வழியே செல்லும் கப்பல்களைச் சூழ்ந்து கொண்டு சரக்குகளைக் கொள்ளையடிப்பதோடு பயணிகளையும் சிறைப்பிடித்துச் செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, ஏராளமான கடற்படைக் கப்பல்களை அப்பகுதியில் சுற்றுக்காவல் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கடந்த ஓராண்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களும் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் என 25க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு அரபிக்கடலில் 30க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்திய கடற்படை குவித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் அதிரடியான நடவடிக்கைகளால், 400க்கும் மேற்பட்டோரின் உயிர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மேலும் 230க்கும் மேற்பட்ட வணிக கப்பல்களைக் கொள்ளையர்களிடம் சிக்காமல் பாதுகாப்பளித்துள்ளது.
இதனால், 90 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் பாதுகாக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.34,117 கோடி (400 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகும் என தெரிவித்து உள்ளது.


