புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தைச் சில எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு அந்தப் பயணம் ஒப்புதல் அளிப்பதுபோல உள்ளதாக அவைக் குறைக்கூறின.
இஸ்ரேலுக்குத் திரு மோடி ‘கெட்ட’ நேரத்தில் சென்றதாகக் கூறிய காங்கிரஸ் கட்சி, ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலுக்கும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்த அது ஒப்புதல் அளித்தது போல தோன்றுவதாகக் குறிப்பிட்டது.
தாக்குதல் தொடர்பில் திரு மோடியின் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் இந்தியாவின் நற்பண்புகளையும் கொள்கைகளையும் கீழறுப்பதாக உள்ளது என்றார் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஜெய்ராம் ரமேஷ்.
ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் கொலை இழிசெயல் என்று திருவாட்டி பிரியங்கா காந்தி சாடினார்.
ஈரான்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 9 மில்லியன் இந்தியர்கள் வேலைசெய்கின்றனர் என்றும் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா வளைகுடா நாடுகளை அதிகம் சார்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்ட கன்யூனிஸ்ட் கட்சி, ஈரான்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் பொருளியல் நிலைத்தன்மையைக் குலைப்பதாகக் கூறியது.
வளைகுடா நாடுகளிடமிருந்து இந்தியா ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“எரிசக்தி விலை நிச்சயம் உயரும்,” என்றார் ஆசியக் குழுமத்தின் பங்குதாரர் அசோக் மாலிக்.
திரு காமெனி கொல்லப்பட்டது தொடர்பில் இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்திய வெளியுறவு அமைச்சும் பிரதமர் அலுவலகமும் கருத்துக் கூறவில்லை.
இதற்கிடையே, முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டங்கள் மூண்டன.
ஜம்மு-காஷ்மீரின் முதல்வர் ஒமர் அப்துல்லா மக்கள் அனைவரும் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் காவல்துறை அதிகாரிகள் வன்முறையாக நடந்துகொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

