புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 29ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 10.33 மணிக்கு, ‘ஆக்ஸியம் மிஷன்-4’ (ஆக்ஸ்-4) திட்டத்தின்படி, ‘ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்’ விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து ‘ஆக்ஸ்-4’ என்ற விண்வெளித் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
இத்திட்டத்தின் கீழ், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லவிருந்தார்.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்பயணம் தடைபட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 8ஆம் தேதி அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.