புதுடெல்லி: மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தியுள்ள வேளையிலும், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்துவரும் நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார்.
மே 15 முதல் மே 20 வரை அவர் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அரசுமுறைப் பயணம் செய்ய இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணத்தின் தொடக்கமாக, மே 15ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் சென்று சேரும் திரு மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகம்மது சயீத் அல்னஸ்யானைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவர் செல்வார் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
எரிசக்தி விலைகளின் திடீர் உயர்வு நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதித்து வரும் நிலையில், எரிபொருள் சேமிப்பு, இறக்குமதிகளைக் குறைப்பதுடன் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தள்ளிப்போடுவது, பயணங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கையோடு வெளிநாட்டுப் பயணங்களுக்குத் திரு மோடி தயாராகி வருகிறார்.

