புதுடெல்லி: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றுள்ளார்.
மேலும் அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 25) உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைத் திரு மோடி பெறுகிறார்.
ஈரான்-அமெரிக்கா இடையேயான பூசல் காரணமாக மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்த வட்டாரத்திற்குத் திரு மோடி சென்றுள்ளார்.
இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் பிரதமர் மோடி தமது பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டார்.
‘‘எனது அன்பு நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அழைப்பின் பேரில், இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அண்மைய ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது. பொருளியல், தொழில்நுட்பம், அறிவியல், வர்த்தகம் எனப் பல பிரிவுகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் பிரதமர் நெட்டன்யாகுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள இருக்கிறேன்,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
திரு மோடியின் வருகையை முன்னிட்டு இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட், இந்தியத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களால் ஒளியூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

