ஆம்ஸ்டர்டாம்: இந்தியாவில் தத்தெடுக்கப்பட்டு நெதர்லாந்தில் வளர்ந்த இரு தோழிகள் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் உடன்பிறந்த சகோதரிகள் என்பதை மரபணுப் பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர்.
மீனா கெல்டிங்க், 43, மீனால் டிஜ்சன், 44, இருவரும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள ஓர் அனாதை இல்லத்தில் விடப்பட்டனர். நெதர்லாந்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்ட அவர்கள், 160 கிலோமீட்டர் இடைவெளியில் வளர்ந்தனர்.
கடந்த 1996ஆம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஒரு சந்திப்பில் இருவரும் முதன்முதலில் சந்தித்தனர். இருவருக்கும் இடையே உடனடி பிணைப்பு ஏற்பட்டதுடன், உருவ ஒற்றுமையையும் நண்பர்கள் கவனித்தனர். முகவரிகளைப் பரிமாறிக்கொண்ட அவர்கள் விளையாட்டாக ஒருவரையொருவர் ‘சகோதரி’ என்று அழைத்துக்கொண்டனர். பின்னர் 15 ஆண்டுகள் தொடர்பில்லாமல் போயினர்.
சில ஆண்டுகளுக்கு பிறகு சமூக வலைத்தளம் மூலம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி, நேரில் சந்தித்துக்கொண்டனர். குடும்பத்தினர், நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் இருவரும் மரபணுப் பரிசோதனை செய்தனர். இருவரது மரபணுக்களும் 100% ஒத்துப் போகும் தன்மைகொண்டதாக இருந்தன. தாங்கள் சகோதரிகள் என்று அறிந்த இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“பல ஆண்டுகளாக என் இதயத்தில் இருந்த வெற்றிடம் நிரம்பியதுபோல் உள்ளது. விடுபட்ட புதிர் துண்டு இப்போது கிடைத்துவிட்டது,” என்று மீனா உருக்கமாகக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மீனால், “நாங்கள் சகோதரிகளாவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தோம். காலம் முழுவதும் நாங்கள் சகோதரிகளாகவே வாழ்ந்திருக்கிறோம், ஆனால் அது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


