பெண் ஒருவரும் அவருடைய இரண்டு குழந்தைகளும் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததைத் தொடர்ந்து அந்த மூவரின் மீதும் ரயில் ஓடிய சம்பவத்தில் அவர்கள் நூலிழையில் உயிர்தப்பினர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் டிசம்பர் 23ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவியது.
டெல்லி செல்வதற்காக அந்தப் பெண்ணும் அவருடைய குடும்பத்தாரும் பார் ரயில்வே நிலையத்துக்குச் சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
ரயில் தளமேடையில் இருந்த மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு ரயிலில் ஏறியபோது, அந்தப் பெண்ணும் அவருடைய பிள்ளைகளும் தள்ளிவிடப்பட்டதில் தண்டவாளத்தில் விழுந்துவிட்டனர்.
அங்கிருந்த சிலர் அம்மூவரையும் காப்பற்ற முயன்றனர். ஆனால், அவர்களைத் தளமேடைக்குக் கொண்டுவருவதற்குள் ரயில் புறப்படத் தொடங்கியது.
ரயில் வேகமாகச் சென்றபோது தம் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக தண்டவாளத்தில் அந்தப் பெண் தன்னை அவர்கள்மீது போர்த்திக்கொண்டார்.
அந்த இடத்திலிருந்து ரயில் சென்ற உடனே அம்மூவரையும் காப்பாற்ற அங்கிருந்தோர் தண்டவாளத்தில் குதித்தனர்.
முன்னதாக, ரயிலில் ஏறிய அந்தப் பெண்ணின் கணவர் ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலையத்துக்கு ஓடி வந்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பெண்ணும் அவருடைய பிள்ளைகளும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களுக்குக் காயம் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறினர்.

