நொய்டா: நடன விருந்து நிகழ்ச்சிக்குப் பாம்பு நஞ்சு விநியோகித்த சந்தேகத்தின்பேரில் இந்திய யூடியூப் பிரபலம் ஒருவரை நொய்டா காவல்துறையினர் ஞாயிறன்று (மார்ச் 17) கைதுசெய்தனர்.
எல்விஸ் யாதவ், 26, என்ற இந்த ஆடவர், இரண்டாம் பருவ ‘பிக் பாஸ் ஓவர் தி டாப்’ போட்டியின் வெற்றியாளர்.
எல்விசை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு நடன விருந்து நிகழ்ச்சிக்கு இவர் பாம்பு நஞ்சு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஓப்பியம் போதைப்பொருளைப் போன்ற தன்மை கொண்ட, ‘ஓப்பியாய்டு’ எனும் செயற்கைப் போதைப்பொருளைத் தயாரிக்க பாம்பு நஞ்சு பயன்படுத்தப்பட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவித்துள்ளது.
அந்த நடன விருந்து நடந்த இடத்தைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து பாம்பு நஞ்சையும் ஐந்து கருநாகங்கள் உட்பட ஒன்பது பாம்புகளையும் காவல்துறை கைப்பற்றியதாக இந்தியா டுடே ஊடகச் செய்தி கூறுகிறது.
அத்துடன், 20 மில்லிலிட்டர் கருநாக நஞ்சு அடங்கிய குப்பியும் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக, அந்த நடன விருந்தில் கலந்துகொண்டவர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பாம்பு நஞ்சு இருந்ததைத் தடயவியல் அறிக்கைகள் உறுதிப்படுத்தின.