புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், இந்தியர்களில் பலரது கவனம் நிலவின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கையெழுத்திட்ட அனைத்துலக ஒப்பந்தம், விண்வெளியில் தனியார் உரிமைகோருவதைத் தடைசெய்துள்ளது.
ஆனாலும், நிலவில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஆசைகாட்டும் மோசடிப் பேர்வழிகளின் வலையில் விழுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நிலவில் நிலம் விற்பனை செய்வதாகப் பல இணையத்தளங்கள் தற்போது முளைத்துள்ளன. கிட்டத்தட்ட நூறு இந்தியர்கள் அந்த இணையத்தளங்களில் பதிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன என்று ‘மாத்ருபூமி’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கான் நிலவில் இடம் வாங்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
1967 விண்வெளி ஒப்பந்தத்தின்படி, எந்த ஒரு நாடும் நிலவையோ அல்லது விண்கோள்களையோ உரிமை கொண்டாட முடியாது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தன் மனைவி பெயரில் நிலவில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக அச்செய்தி குறிப்பிட்டுள்ளது. இதற்காக அவர்கள் ரூ.20,937 (S$344) கட்டணம் செலுத்தினர்.
இது முற்றிலும் கற்பனையானது என்று தெரிந்திருப்பினும் சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் அவ்வாறு செய்ததாக அவ்விணையர் கூறினர்.
லூனார் ரெஜிஸ்ட்ரி, காஸ்மிக் ரெஜிஸ்டர், மூன் எஸ்டேட்ஸ் போன்ற இணையத்தளங்கள் நிலவில் மனை விற்பதாகக் கோரி வருகின்றன. இணையம் வழியாகப் பணம் செலுத்துவோர்க்கு, அவர்களது பெயரில் நிலப் பத்திரங்கள் (கற்பனையானவை) அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அத்துடன், தாங்கள் வாங்கிய இடத்தின் செயற்கைக்கோள் புகைப்படம், நிலவியல் தகவல்கள், நிலாக் குடியரசின் குடியுரிமை, ‘ஃபிளை டிரான்ஸ் லூனார்’ விமானப் பயணச்சீட்டு போன்ற கற்பனையான ஆவணங்களும் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.