அகமதாபாத்: மேற்கு ஆசியப் போர், அமெரிக்க வரி ஆகியவற்றுக்கு இடையிலும் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இதுவரை காணாத அளவுக்கு 863 பில்லியன் டாலர் வளர்ச்சியை எட்டியுள்ளது.
மத்திய வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் அஜய் பாடூ புதன்கிழமை (ஜூன் 17) இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
குஜராத் சிறப்புப் பொருளியல் வட்டாரங்களின் 12 ஆண்டுகாலச் சாதனைகள் என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார்.
“கடந்த ஆண்டு இந்தியப் பொருள்களுக்கு 25 விழுக்காட்டு வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.
“தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால், கூடுதலாக 25 விழுக்காட்டு வரியை அவர் விதித்தார்.
“அதன் பின்னர் ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
“இப்படிப்பட்ட சூழலிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2025-26 நிதியாண்டில் US$441 பில்லியனிலிருந்து US$863.11 பில்லியனுக்கு அதிகரித்துள்ளது.
“இது கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி ஆகும். மேலும், வரலாற்றில் இதுவரை காணாத வளர்ச்சி இது.
தொடர்புடைய செய்திகள்
“கடினமான ஆண்டிலும் இந்திய ஏற்றுமதி சாதனை புரிந்துள்ளது,” என்றார் அஜய் பாடூ.
காண்ட்லா சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் ஞானேஷ்வர் பி பாட்டீல் பேசுகையில், சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா அற்புதமாகச் செயல்பட்டுள்ளது என்றார்.

