புதுடெல்லி: இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதம் ஆறு மாதம் காணாத சரிவைத் தொட்டதாக தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தி அந்த மாதத்தில் பாதிக்கப்பட்டதாகவும் அவை குறிப்பிட்டன.
தொழிற்சாலை உற்பத்திக் குறியீட்டு எண் 2.9 விழுக்காடாக பிப்ரவரியில் பதிவானது. ஜனவரியில் அது 5.2 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆறு மாதங்களோடு ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதக் குறியீடு மிகவும் குறைவு.
மேலும், ஆண்டு அடிப்படையில் இது 2.7 விழுக்காடு சரிவு. 2024 பிப்ரவரியில் 5.6 விழுக்காடாக உற்பத்தி வளர்ச்சிக் குறியீடு பதிவானது.
2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரையிலான 2024-25ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு 4.1 விழுக்காடாகப் பதிவானது.
இது, 2023-24ஆம் நிதியாண்டின் அதே காலத்தில் பதிவான 6 விழுக்காட்டைவிடக் குறைவு.
சுரங்கத் துறையின் உற்பத்தி வளா்ச்சி 1.6 விழுக்காடு குறைந்தது. ஓராண்டுக்கு முன்னா் அது 8.1 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
2024 பிப்ரவரியில் 7.6 விழுக்காடாக இருந்த மின்சாரத் துறை உற்பத்தி வளா்ச்சி, இந்த பிப்ரவரியில் 3.6 விழுக்காட்டுக்கு இறங்கியது.
அதேபோல மூலதனப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 1.7 விழுக்காட்டில் இருந்து 8.2 விழுக்காட்டுக்குச் சரிந்தது.
மேலும், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்களின் உற்பத்தி, முதன்மைப் பொருள்களின் உற்பத்தி, இடைநிலைப் பொருள்களின் உற்பத்தி, விரைவு நுகர்பொருள்களின் உற்பத்தி, நீடித்து நிலைக்கும் நுகர்பொருள்களின் உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியும் இவ்வாண்டு பிப்ரவரியில் வீழ்ச்சி கண்டதாகத் தரவுகள் குறிப்பிட்டு உள்ளன.