புதுடெல்லி: இந்தியா, கைப்பேசி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இரண்டு புதிய நெடுஞ்சாலைகளை திறந்து வைத்து அவர் பேசினார்.
“11 ஆண்டுகளுக்கு முன்பு, நமக்குத் தேவையான பெரும்பாலான கைப்பேசிகளை இறக்குமதி செய்து வந்தோம். இன்று, பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.
“ஒவ்வோர் ஆண்டும், நாங்கள் 30-35 கோடி கைப்பேசிகளை உற்பத்தி செய்கிறோம், மேலும் அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் தளமாக மாறி இருக்கிறது,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இவ்வளவு குறுகிய காலத்தில், யமுனை நதியிலிருந்து 16 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குறுகிய காலத்திற்குள், டில்லியில் 650 மின்சாரப் பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக திறக்கப்பட்டுள்ள இரண்டு நெடுஞ்சாலைகள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்,” என்றார்.
“டெல்லியில் உள்ள மக்களின் அனைத்து சிரமங்களையும் நீக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் டெல்லியை பாழாக்கி விட்டனர். கடந்த 11 ஆண்டுகளில் டெல்லியில் சாலைப் போக்குவரத்து சிறப்பாக மாறி உள்ளது,” என்று மோடி மேலும் தெரிவித்தார்.
டெல்லியின் துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டெல்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, 5.9 கி.மீ. ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரையிலும் 4.2 கி.மீ. துவாரகா செக்டார்-21ஐ டில்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.
அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான நகர்ப்புற விரிவாக்க சாலை- பகுதி 2 ஆகும். இது பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.