புதுடெல்லி: முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
இந்தியக் கடற்படையை வலுவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் ஓர் அங்கமாக கடற்படையிலுள்ள போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து, கடற்படையில் புதிய போர்க் கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன என்றும் இதன்மூலம் சீன கடற்படைக்கு இணையாக இந்தியக் கடற்படை உருவெடுத்து வருகிறது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியக் கடற்படைக்காக ஏழு போர்க்கப்பல்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.45,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ‘புராஜெக்ட் 17ஏ’ என்ற பெயரில் மும்பையில் பணிகள் தொடங்கின.
முதற்கட்டமாக கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐஎன்எஸ் நீலகிரி இந்தியக் கடற்படையில் இணைந்தது. தற்போது ஆறாவது போர்க் கப்பலாக ஐஎன்எஸ் மகேந்திர கிரி உருவாகியுள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு ஐஎன்எஸ் மகேந்திர கிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
149 மீட்டர் நீளம் கொண்ட இப்போர்க் கப்பலின் எடை 6,670 டன் ஆகும். இது மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இதில் மூத்த அதிகாரிகள், கடலோடிகள் 230 பேர் பணியாற்றுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்தியக் கடற்படை வெறும் போர்ப்படையாக மட்டுமன்றி, நாட்டின் பொருளியல் நலன்களுக்கு வலுவான பாதுகாவலனாகவும் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் போர் தொடங்கிய பிறகு, இந்தியக் கடற்படை ‘ஆப்பரேஷன் ஊர்ஜா சுரக் ஷா’ மூலம் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற 18 வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து அவற்றை வழிநடத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு நாட்டுக்கும் திறமையான, உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய கடற்படை எவ்வளவு அவசியம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

