லே: இண்டிகோ விமான நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் ஒருவர், ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது அஜய் தாக்கூர் என்ற அந்த இளையர், தற்போது லே விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நகரில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர், ஒரு வாகனத்தை மறித்துச் சோதனை செய்தபோது, தாக்கூரிடமிருந்து 2.27 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
லடாக்கின் இளையர்களைக் குறிவைத்து மாநிலங்களுக்கு இடையே இயங்கி வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அண்மைய வாரங்களில் நடத்திய தொடர் அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதில் விமான நிலைய ஊழியர்கள், மாநிலங்களுக்கு இடையிலான விநியோகிப்பாளர்கள், உள்ளூர் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதில் தற்போது விசாரணை கவனம் செலுத்தி வருகிறது.
குற்றம்சாட்டப்பட்ட நபர் தனிப்பட்ட முறையில் செயல்பட்டாரா அல்லது லடாக்கிற்குள் போதைப்பொருள்களைக் கொண்டு வந்து விநியோகிக்கும் ஒரு பெரிய கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாகச் செயல்பட்டாரா என்பதையும் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த யூனியன் பிரதேசத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் 33 போதைப்பொருள் வழக்குகளைப் பதிவு செய்து, 27 பேரைக் கைது செய்துள்ளன. பெருமளவிலான போதை, மயக்கப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையிலான விநியோகச் சங்கிலிகளை உடைக்கவும், இந்த சட்டவிரோதப் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

