இண்டிகோ பயணப் பாதையில் ஆறு புதிய இடங்கள் சேர்ப்பு

இண்டிகோ பயணப் பாதையில் ஆறு புதிய இடங்கள் சேர்ப்பு

1 mins read
c0d92eac-468f-4d2a-963c-e2ca63756def
அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய இண்டிகோ பயணப் பாதை விரிவாக்கம். படம்: ராய்ட்டர்ஸ் -

மும்பையில் இருந்து கென்யத் தலைநகர் நைரோபிக்கும் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கும் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் நேரடி விமானச் சேவைகளை தான் வழங்கப்போவதாக இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜூன், செப்டம்பர் மாதங்களுக்கு இடையே வாரத்திற்கு 174 புதிய விமானச் சேவைகளை வழங்கப்போவதாகவும் அது வெள்ளிக்கிழமை (ஜூன் 2) கூறியது.

இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து விமானப் பயணங்களுக்கான அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

டெல்லியில் இருந்து ஜார்ஜியாவின் திபிலிசிக்கும் அஸர்பைஜானின் பக்கூவுக்கும் ஆகஸ்ட்டில் விமானச் சேவைகள் தொடங்குகின்றன. உஸ்பெகிஸ்தானின் தஷ்கென்ட்டுக்கும் கஸக்ஸ்தானின் அல்மாட்டிக்கும் செப்டம்பரில் விமானச் சேவைகள் தொடங்கும்.

டெல்லிக்கும் ஹாங்காங்கிற்கும் இடையே ஆகஸ்ட்டில் தினசரி விமானச் சேவைகளை தான் தொடரப்போவதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இச்சேவைகள் மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.