தொழில்நுட்பக் கோளாறு: இண்டிகோ விமானப் பயணிகள் பாதிப்பு

தொழில்நுட்பக் கோளாறு: இண்டிகோ விமானப் பயணிகள் பாதிப்பு

1 mins read
9146ba68-9674-48dc-9fb6-8236981c4af2
தனது கணினி அமைப்புச் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாற்றைச் சரிசெய்ய முயன்றுவருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமானப் பயணிகள் சனிக்கிழமையன்று (அக்டோபர் 5) சிரமங்களை எதிர்கொண்டனர்.

பயண ஆயத்த நடைமுறை (check-in) முகப்பில் நீண்ட வரிசை, கூடுதல் காத்திருப்பு நேரம் உள்ளிட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினர்.

இதுகுறித்து, “தற்காலிகமாக எங்களது கணினி அமைப்புச் செயல்பாட்டில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களது இணையத்தளமும் பயணச்சீட்டு முன்பதிவுத் தளமும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க நேரிடலாம். அத்துடன், விமான நிலையங்களிலும் நீண்ட வரிசையையும் கூடுதல் காத்திருப்பு நேரத்தையும் பயணிகள் எதிர்நோக்கலாம்,” என்று இண்டிகோ நிறுவனம் தனது எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது.

மேலும், கோளாற்றைச் சரிசெய்து, செயல்பாடுகளை வழக்கநிலைக்குக் கொண்டுவர தனது குழுவினர் பணியாற்றி வருவதாகவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்