புதுடெல்லி: மலிவுக்கட்டண இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவிற்கு விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் ரூ.1.2 கோடி (S$195,750) அபராதம் விதித்துள்ளது.
விமானம் வானில் பறக்க தாமதமான நிலையில், விமானத்தைவிட்டுக் கீழே இறங்கிய பயணிகள், தார்ச்சாலையிலேயே அமர்ந்து உண்ட காணொளி அண்மையில் இணையத்தில் பரவலானது.
இதனையடுத்து, அச்சம்பவம் நிகழ்ந்த மும்பை விமான நிலையத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது; விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் ரூ.60 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ நிறுவனத்திற்கும் மும்பை விமான நிலையத்திற்கும் காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அபராதத்தை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டுமென இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மைய காலகட்டத்தில் ஒரு விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுதான் என்று கூறப்படுகிறது.
இம்மாதம் 14ஆம் தேதி கோவாவிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய அவ்விமானம், எதிரில் இருப்பது தெரியாத அளவிற்கு டெல்லியில் கடும் பனிமூட்டம் இருந்ததால் மும்பைக்குத் திருப்பிவிடப்பட்டது. களைத்துப்போன பயணிகள், விமானத்திலிருந்து இறங்கி, அதனருகிலேயே தரையில் அமர்ந்து உண்டதைக் காணொளி காட்டியது.