புதுடெல்லி: நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ பயணிகள் விமானம், ஸ்ரீநகர் அனைத்துலக விமானநிலையத்தில் தரையிறங்கியபின், அதனை நிறுத்தி வைக்கும் இடத்தை நோக்கிச் சென்றபோது தரைக்கட்டுப்பாட்டு வழிகாட்டி அமைப்பின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) காலை 9.02 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது, விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் இயல்பு நடவடிக்கைகள் எவ்விதப் பாதிப்புமின்றி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


