ஹைதராபாத்: இந்தியாவின் ஹைதராபாத் நகரிலிருந்து விசாகப்பட்டினத்திற்குச் சென்ற இண்டிகோ விமானம், பயணிகள் 37 பேரின் பயணப்பைகளைக் கவனக்குறைவாக விட்டுச்சென்றது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிமை (09-02-2023) நிகழ்ந்தது.
“கவனக்குறைவாக 37 பேரின் பயணப்பைகளை விட்டுவிட்டு, ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு 6E 409 விமானம் புறப்பட்டுச் சென்றது,” என்று இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இதனால் பயணிகளுக்கு நேரிட்ட அசௌகரியத்திற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்ட அந்நிறுவனம், பயணப்பைகளை அவர்களின் தங்குமிடத்திற்கே நேரில் கொண்டு வந்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயணப்பைகள் வந்துசேராதது குறித்துப் புகார் அளித்த பின்னரே இந்தக் கவனக்குறைவான செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, பயணிகள் ஒரு படிவத்தை நிரப்பித் தந்துவிட்டுச் சென்றனர்.