ஸ்ரீநகர்: இந்திய எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
இந்தோ, திபெத் எல்லை காவல் படை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையங்களை அமைக்க உள்ளதாக இந்தோ திபெத் எல்லை காவல்படை தெரிவித்துள்ளது.
இப்படையின் 64வது எழுச்சி தினம் ஜம்முவில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதன் தலைமை இயக்குநர் பிரவீன் குமார் கலந்துகொண்டு பேசியபோது, இருநாடுகளுக்கு இடையேயான எல்லையில் முன்பு 180 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த எண்ணிக்கை தற்போது 215ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏழு புதிய பட்டாலியன்கள் அமைக்கப்பட்டதன் மூலம் இத்திட்டம் வலுபெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் எல்லைப் பகுதி கண்காணிப்பு மேம்பட்டுள்ளது என்றார்.
மேலும் 41 கண்காணிப்பு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றுள் பத்து மையங்களில் முழுவதும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
“லடாக்கில் உள்ள லூகுங் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தாங்கி ஆகிய இடங்களிலும் பெண் காவலர்கள் பணியாற்றும் மையங்கள் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“எல்லைப் பகுதியில் மேலும் 8 மையங்களில் பெண்கள் பணியாற்றுவர். பயிற்சி மையங்களில் வழங்கப்படும் பயிற்சிகள், மலைப் பகுதிகளில் பணியாற்றும் வகையில் மேம்படுத்தப்படும்,” என்றார் திரு பிரவீன் குமார்.
இந்தியா, சீனா இடையேயான 3,488 கிலோ மீட்டர் தூர எல்லைப் பகுதியை கண்காணிக்கும் பொறுப்பில் இந்தோ - திபெத் எல்லை காவல்படை ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களும் அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். 9,000 அடி முதல் 14,000 அடி வரையுள்ள மலைப் பகுதிகளில் இவர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.

