புதுடெல்லி: இந்தியாவில் பொதுமுடக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் இந்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக எரிபொருள்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து, கொவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டது போன்ற ஒரு பொதுமுடக்கம் மீண்டும் ஏற்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படும் நிலையில், இந்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது. எனவே, எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பான களநிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
“பிரதமர் மோடி தலைமையிலான அரசு, குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி, பிற அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம்.
“உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் இந்தியா தனது திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தி உள்ளது. மேலும், நாங்கள் சரியான நேரத்தில், திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
“இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்து பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். இந்திய அரசாங்கத்திடம் அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. இதுபோன்ற காலங்களில் நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது முக்கியம். வதந்திகளைப் பரப்பி பீதியை உருவாக்கும் முயற்சிகள் பொறுப்பற்றவை, தீங்கு விளைவிப்பவை,’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “மத்திய கிழக்கு போர் காரணமாகச் சவாலான உலகளாவிய நிலைமை நீண்ட காலம் நீடிக்கக்கூடும். எனவே நாம், கொவிட் காலத்தை எதிர்கொண்டதுபோல் சவாலான சூழலை எதிர்கொள்ள ஒற்றுமையுடன் தயாராக இருக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர்தான் நாட்டில் எரிவாயுக் கலன் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் கருத்தில் கொண்டு நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்ற வதந்திகள் எழுந்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இந்தியா வசம் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கைவசம் இருக்கிறது என்றும், எனவே பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் தேவையற்றது என்றும் இந்திய பெட்ரோலிய அமைச்சு மார்ச் 26ஆம் தேதி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

