புதுடெல்லி: உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி விரைவில் இந்தியாவிற்குச் செல்லவிருப்பதாக இந்தியாவுக்கான உக்ரேனியத் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரேன்- ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். சில நாள்களுக்கு முன்னர் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தொலைபேசி மூலம் பேசினார்.
உக்ரேன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்குத் தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரேனியத் தூதர் போலிஷ்சுக், “உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி விரைவில் இந்தியா வரவிருக்கிறார். அவரது பயணத் தேதியை இறுதிசெய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு வருகை தரும் ஸெலென்ஸ்கி, பிரதமர் மோடியைச் சந்திப்பார். அப்போது போர் நிலவரம் குறித்தும் அவர்கள் பேசுவார்கள்,” என்று கூறியுள்ளார்.