புதுடெல்லி: நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வரும் எம்பிக்கள் அறிவார்ந்த கைக்கடிகாரம் (ஸ்மார்ட் வாட்ச்), அறிவார்ந்த சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் அறிவுறுத்தியது.
இதுதொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அறிவார்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட சில சாதனங்கள் எம்பிக்களின் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளில் இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தனி உரிமைகளுக்கு எதிராக உள்ள இந்த அறிவார்ந்த கருவிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூட்டத்தொடரின்போது நுழைவு வாயிலின் முன்பு போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் மக்களவைச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடக்கும்போது மற்ற அலுவல்களில் பங்கேற்க வரும் எம்பிக்களின் நடமாட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படுவதாக அந்தச் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளில் எம்பிக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் பதாகைகள் கம்புகள், கத்திகள், வெடிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நாடாளுமன்ற வளாகத்திற்குக் கொண்டு வரக்கூடாது என்றும் மக்களவைச் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

