புதுடெல்லி: பணம் வைத்து விளையாடும் இணைய விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான மசோதாவை இந்திய நாடாளுமன்றம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) நிறைவேற்றியது.
இவ்விளையாட்டுகளால் நிதி, உளவியல் தீங்கு ஏற்படக்கூடிய பேரபாயத்தை அரசாங்கம் கோடிகாட்டியதை அடுத்து ‘இணைய விளையாட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டுச் சட்டம்’ நிறைவேறியது. இதன்கீழ் பணம் வைத்து விளையாடும் அனைத்து இணைய விளையாட்டு பரிவர்த்தனைகளையும் தடை செய்ய முடியும்.
இந்தியாவில் 2029ஆம் ஆண்டுக்குள் யுஎஸ் $3.6 பில்லியன் மதிப்புள்ளதாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட அந்தத் தொழில்துறையை இந்தத் திடீர் தடை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தடைக்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், வேலை இழப்புகள், செயலிகள் முழுமையாக முடங்கிவிடும் அச்சத்தில் நிர்வாகிகள் உள்ளனர்.
வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருந்தாலும் இணைய விளையாட்டுக்கு நாட்டில் தெளிவான சட்டங்கள் இல்லை. இதனால் மோசடி, இணைய விளையாட்டுக்கு அடிமையாவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை முறைப்படுத்தப் புதிய இணைய விளையாட்டு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜூலை 21ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) நிறைவடைந்தது. பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து நடந்த ஆப்பரேஷன் சிந்தூர், இந்தியா–பாகிஸ்தான் உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவாதம் நடத்தக்கோரினர். பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் சில:
- பதவி நீக்க மசோதா (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டு இருந்தால், 30 நாட்கள் சிறை/காவல் தண்டனை ஏற்பட்டால், தானாகவே பதவி நீக்கம் செய்யப்படும்).
- ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதா.
- பொது நிதி வெளிப்படுத்தல் மசோதா.
தொடர்புடைய செய்திகள்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு (திருத்தம்) மசோதா.