மும்பை: ரயில்கள், ரயில் தளமேடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நடனமாடும் போக்கு அண்மையில் அதிகரித்துள்ளது.
இத்தகைய செயல்கள் தேவையற்றவை என்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு சிரமமும் ஏற்படுத்துபவை. இப்போது, பாலிவுட் பாடல் ஒன்றுக்குப் பெண் ஒருவர் நடனமாடுவதைக் காட்டும் காணொளி ஒன்று எக்ஸ் வலைத்தளத்தில் வலம் வருகிறது. அக்காணொளி மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சல்வார் குர்தா அணிந்திருக்கும் அப்பெண், 2000ல் வெளிவந்த ‘குருக்ஷேத்ரா’ எனும் இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆப் க ஆனா’ எனும் பாடலுக்கு நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். அவர் ஆடுவதை அங்கிருந்த பலரும் ஆர்வத்துடன் பார்த்தாலும், சிலர் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
அக்காணொளியைப் பகிர்ந்த எக்ஸ் பயனர் ஒருவர், “விமான நிலையங்களுக்கும் கிருமி வந்துவிட்டது,” என்று பதிவிட்டார்.
பொது இடத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு விளைவித்தாகக் கூறி அப்பெண்ணை விமர்சித்த பலர், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி விமான நிலைய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.
சிலர் அப்பெண்ணின் நடனம் குறித்து நகைச்சுவையான கருத்துகளைக் கூறினாலும், பொது இடங்களில் நடனமாடும் போக்கு அதிகரித்திருப்பதாக வேறு சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

