பாட்னா: பீகார் மாநிலத்தில் புதிய வாக்காளர்களுக்கான இணைய விண்ணப்பத்தில் ‘படிவம்-6’ என்னும் புதிய அம்சத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது.
வாக்காளராகப் பதிவுசெய்யும் விண்ணப்பதாரரின் பெற்றோர் இதற்கு முந்திய, ‘எஸ்ஐஆர்’ (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தில் இடம்பெற்று இருந்தனரா என்ற விவரத்தையும் அதற்கான உறுதிமொழியையும் அந்தப் படிவத்தில் நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுப்பதற்கு அந்தப் படிவத்தில் மூன்று தெரிவுகள் தரப்பட்டுள்ளன.
1. கடந்த எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் உள்ளது.
2. கடந்த எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் எனது பெற்றோரின் (தந்தை, தாய், தாத்தா, பாட்டி) பெயர் உள்ளது.
3. கடந்த எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் எனது பெயரோ அல்லது எனது பெற்றோரின் பெயரோ இல்லை.
-ஆகியன அந்த மூன்று தெரிவுகள்.
ஏற்கெனவே நடைபெற்ற எஸ்ஐஆர் நடவடிக்கையில் தங்களது பெயரைச் சேர்க்கத் தவறிய வாக்காளர்களும் புதிதாக வாக்காளராகப் பதிவு செய்வோரும் இந்தத் தெரிவுகளுக்கான உறுதிமொழியை அளிக்கவேண்டும்.
படிவம் 6ல் உறுதிமொழியைச் சேர்த்தால் மட்டுமே இணைய விண்ணப்பத்தின் அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல முடியும்.
வாக்காளர் பட்டடியலிலிருந்து இரட்டைப் பதிவையும் இறந்தவர்களின் பெயரையும் இடம் மாறியோரையும் நீக்கும் அதேவேளை, தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதே எஸ்ஐஆர் நடவடிக்கையின் நோக்கம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

