மும்பை: அபுதாபியிலிருந்து மும்பைக்குச் சென்ற விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இத்தாலியப் பெண்ணை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர். பின்னர் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
பாவ்லா பெருச்சியோ எனும் அப்பெண் பயணி, நேற்று முன்தினம் 30ஆம் தேதி திங்கட்கிழமை யுகே256 எனும் ஏர் விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்தார்.
போதையில் இருந்த அவர், ‘எக்கானமி’ பிரிவிலிருந்த தமக்கு ‘பிஸ்னஸ்’ பிரிவில் இருக்கை ஒதுக்கித் தரும்படி விமானச் சிப்பந்திகளை வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது.
அவரது கோரிக்கையை விமானச் சிப்பந்திகள் ஏற்கவில்லை. அதனைத் தொடர்ந்து, அப்பெண் விமானச் சிப்பந்திகளைத் தாக்கி, அவர்கள்மீது காறி உமிழ்ந்ததாகக் கூறப்பட்டது.
அத்துடன், தமது ஆடைகளில் சிலவற்றைக் களைந்துவிட்டு, அரை நிர்வாணமாக அவர் நடமாடியதாகவும் சொல்லப்பட்டது.
விமானச் சிப்பந்திகளின் புகாரையடுத்து, மும்பையில் விமானம் தரையிறங்கியதும் அப்பெண் கைதுசெய்யப்பட்டார். பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை மும்பை நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ஏர் விஸ்தாரா, சக பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் அபாயம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதை ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையில் தான் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டது.