ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள கோர்ஹார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்டித்ரி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மூன்று நக்சல் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சகாதேவ் சோரன் என்பவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பண்டித்ரி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நக்சல் கிளர்ச்சியாளர்களை ஒழித்துக்கட்ட சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 150க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர் குழுவில் உள்ளவர்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டு நல்வாழ்க்கைக்குத் திரும்பவும் இந்திய அரசாங்கம் உதவிவருகிறது.