சென்னை: ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழக்கில் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது “முன்னதாக தணிக்கை வாரியத்தில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தைப் பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?,” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கக் குழு உள்ளது. அந்தக் குழுதான் படத்தைப் பார்த்துள்ளது” என்று தணிக்கை வாரியத்தின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்குத் தணிக்கை வாரியத் தரப்பில், “அவர் படத்தைப் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. மேலும் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம்,” என்று பதிலளித்தது.
“ஜனநாயகன் படம் தொடர்பாகப் புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் தணிக்கைச் சான்று வழங்கக் கோரினார்கள். கடந்த 6ஆம் தேதி இந்த வழக்குத் தொடரும் போதே, இந்தப் படம் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்பது பட நிறுவனத்துக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை ” என்று வாரியம் தெரிவித்தது.

