கள்ளக்குறிச்சி: காசோலை மோசடி தொடர்பான வழக்கில் நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விபத்துகள் தொடர்பான வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்தார் என்பது அறிவுச்செல்வி என்ற அப்பெண் மீதான குற்றச்சாட்டாகும்.
கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதியின் நேரடி உதவியாளருக்கு உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார் அறிவுச்செல்வி.
கடந்த 1996 ஆம் ஆண்டு விபத்து வழக்கு ஒன்றில் ரூ.10,565 இழப்பீடு வழங்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அறிவுச்செல்வி போலி ஆவணங்களை தயாரித்து, நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.4,78,000 தனது வங்கி கணக்கில் மாற்றி விட்டார்.
இதேபோல் மொத்தம் ஆறு விபத்து வழக்குகளில் நீதிபதியின் உத்தரவுகளைத் திருத்தி ரூ.38,79,982 இழப்பீட்டுத் தொகையை தன் பெயரில் மட்டுமல்லாமல் மகன் வரதராஜன், உறவினர் தமிழரசன் ஆகியோரின் பெயர்களுக்கு பணம் மாற்றியுள்ளார் அறிவுச்செல்வி.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதன்மை குற்றவாளியான அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மகன் வரதராஜன், உறவினர் தமிழரசனுக்கு 8 பிரிவுகளின் கீழ் 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.


