புதுடெல்லி: கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை கடந்த நவம்பர் மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசின் தரப்பில் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏற்கெனவே முடிந்து விட்டது. எனவே, இனி சிபிஐக்கு மாற்றத் தேவையிருக்காது என்று வாதாடினார்.
அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிப்பதால் தமிழக அரசுக்கு என்ன ஆட்சேபம் இருக்கிறது? உங்களது விசாரணையில் திருப்தி இல்லை என்பதால்தான் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது.
எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.